எதிர்நோக்கும் பேராபத்து!

மேற்கு வங்கத்தில் வெடித்திருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் பின்னணியும், அதன் பின்விளைவுகளும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையுள்ள எவரையுமே திடுக்கிட வைக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமை ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன என்பதற்கு முன்பு நந்திகிராமும் இப்போது லால்கரும் எடுத்துக்காட்டுகள்.

கடந்த முப்பது ஆண்டுகளாகவே வளர்ச்சி என்கிற பெயரில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஊடகங்கள் நகர்ப்புற, வசதி படைத்த சமுதாயத்தின் பணக்காரப் படாடோபங்களை நாளும்பொழுதும் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருப்பதை, அரைவயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலையில்லாமல், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாள்தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? “முதலாளித்துவம்’ பற்றி வாய்கிழியப் பேசியவர்களே முதலாளிகளாகிவிடும் விபரீதத்தை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்?

கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் உயிருக்குக் குறி வைத்துத் தோல்வி அடைந்தனர் மாவோயிஸ்ட்டுகள். அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. கட்சித் தொண்டர்களும், அவர்களுக்கு உதவியாகக் காவல்துறையினரும் அப்பாவி மக்களைக் கைது செய்வதும், வீடுகளில் சோதனைகள் நடத்துவதுமாகச் செய்த இம்சைகளின் விளைவாக உருவானதுதான் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்பது. இப்போது, இந்த இயக்கத்தினருடன் மாவோயிஸ்ட்டுகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டனர்.

மக்கள் இயக்கத்தின் துணையுடன் மாவோயிஸ்ட்டுகள், லால்கரிலுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் மீதும், கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடச் செய்துவிட்டனர். இந்த மாவோயிஸ்ட்டுகளின் அட்டகாசம், அடுத்தடுத்த ஊர்களிலும், மாவட்டங்களிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 900 சதுர கிலோமீட்டர் இப்போது மாவோயிஸ்ட்டுகளின் பிடியில். சத்தீஸ்கரிலுள்ள தண்டேவாடாவுக்குப் பிறகு இது அடுத்த மாவோயிஸ்ட் தளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் நடந்த விஷயங்கள் நமக்குத் தெரியும். மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் போல்புர் என்கிற கிராமம். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகண்டன் சாந்தி நிகேதன் கட்டமைப்பு நிறுவனம் என்கிற தனியார் நிறுவனத்துக்காக, மேற்கு வங்கத் தொழில் வளர்ச்சிக் கழகம் 300 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியது. வாக்குறுதி அளித்த நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்பதுடன், பலருக்கும் நஷ்ட ஈடே தரப்படவில்லை என்பதுதான் வேதனை. அதைவிட வேதனை, இன்றுவரை அங்கே எந்தவிதத் தொழிற்சாலையும் நிறுவப்படவும் இல்லை.

விவசாயிகள் பொறுமை இழந்தனர். சுற்றிலும் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் விவசாயம் செய்ய முற்பட்டனர். இவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை அல்ல, மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள். கைகலப்பும், அடிதடியும் என்று தொடங்கி, தோழர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் களத்தில் இறங்கி, இப்போது பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது.

இடதுசாரி அரசின் 32 ஆண்டு ஆட்சியின் மிகப்பெரிய தவறு ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடு அகற்றப்பட்டதுதான். தங்களுக்குச் சாதகமான அல்லது கட்சி சார்புள்ள அதிகாரவர்க்கத்தை மட்டுமே தங்களைச் சுற்றி வைத்துக் கொண்டனர். காவல்துறை, அரசு இயந்திரம் என்று அனைத்திலும் கட்சித் தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூரில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிர்வாகமோ, காவல்துறையோ தலையிட்டுத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியினர் தீர்வு காண்பது என்கிற கலாசாரம் நிலைநிறுத்தப்பட்டது. சிங்குரில், நந்திகிராமில், போல்புரில், இப்போது லால்கரில் என்று இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நிர்வாக இயந்திரம் என்பது செயலிழந்துவிட்டதுதான். கட்சித் தொண்டர்களின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் நிர்வாகத்தின் கடமை என்கிற தவறான கலாசாரத்தால், நல்லது கெட்டது சொல்லவோ, பிரச்னைகளுக்கு நிர்வாக ரீதியான தீர்வு காணவோ வழியில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

லால்கரில் மாவோயிஸ்ட்டுகள் தங்களைச் சுற்றி, உள்ளூர் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு ஏற்பட்டது ஏன்? எப்படி? மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் மற்றும் ஒரிசாவில் உள்ள தீவிரவாதிகள் மத்தியப் பிரதேசம், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கரிலுள்ள தீவிரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இவர்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள தீவிரவாதிகளுக்குத் தருவதுபோன்ற ஆதரவை சீனா நிச்சயமாகக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம்.

எழுபதுகளில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற இடதுசாரிகள் நக்சலைட் இயக்கத்துக்கு ஆதரவளித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இப்போது இடதுசாரிகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளாமல், இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்குத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முற்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கு மத்திய அரசும் காங்கிரஸýம் துணைபோகாது என்று நம்புவோமாக.

ஒன்று மட்டும் நிச்சயம். மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சி என்பதை நினைவில் வைத்து, அதை வேரறுப்பதில் தயக்கம் காட்டலாகாது!
( நன்றி: தினமணி )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: