கபட சந்நியாசிகள் !

மே 9, 2010

சமண — பௌத்த சமயங்களின் வீழ்ச்சியும் , பக்தி மார்க்கத்தின் வெற்றியும் பல புதிய மதக்கலாச்சாரங்களை தமிழகத்தில் தோற்றூவித்தன . அவற்றில் ஒன்றுதான் சந்நியாசிகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தும் — அங்கீகாரமும் . சைவமும் , வைணவமும் போட்டிபோட்டு அவர்களை இறைவனின் அடியார்களாகச் சித்தரித்தன . கடவுளின் அம்சமாகக்கூட அவர்கள் கருதப்பட்டனர் . அவர்களை உபசரிப்பதும் , உணவளிப்பதும் , வணங்குவதும் , அவர்கள் கேட்பதைக் கொடுத்துத் திருப்திப்படுத்துவதும் , சாதாரண பக்தர்களின் மதக்கடமைகளாக — தொண்டுகளாகப் போதிக்கப்பட்டன . அந்தத் தொண்டுகள் சுவர்க்கத்திற்கான திறவுகோல்கள் எனச் சான்றளிக்கப்பட்டன . பெற்ற பிள்ளையைக் கொன்று சமைத்துப் போடவேண்டும் என்று கேட்ட சிவனடியாருக்காக , மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்டரும்… ‘ எனது உடல்பசியைத் தணிக்க உனது மனைவியைத் தரவேண்டும்’ என்று கூசாமல் கேட்ட சிவனடியாரை மகிழ்விக்க , தனது இல்லாளைத் தர முன்வந்த இயற்பகையும் , நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர் . பகுத்தறிவு — மனிதாபிமானம் — பெண்ணியம் ஆகியவை , பக்தியின் பெயரால் அங்கே படுகுழியில் புதைக்கப்பட்டன . அந்த அளவிற்குச் சந்நியாசிகளுக்கு உயரிய செல்வாக்கை உருவாக்கி வளர்த்தன வைதீக மதங்கள் . நாளடைவில் அந்தச் சாமியார்களில் பலர் மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்ற மூன்றையும் துறக்காமல் , அவற்றைச் ‘ சிக்கெனப் பிடித்துக்கொண்ட ‘ சுயநலமிகளாய் மாறி , பசுத்தோல் போர்த்திய புலிகளாய் , மதப்போர்வைக்குள் பாதுகாப்பாக உலாவந்தனர் . காவி உடைக்குள் காமசூத்திரர்களைச் சரிபார்க்கும் சரச ஒத்திகைகள் நடத்தப்பட்டன . அப்பாவி ஆண்களும் , பெண்களும் பக்தியின் பெயரால் நடந்த அந்தச் சுரண்டலுக்குப் பலியானார்கள் . இது , இன்றுவரை நீடிக்கும் அவலமாகத் தொடர்வது வெளிப்படையான — வேதனையான உண்மை . சித்தர்களின் காலத்தில் இப்படிப்பட்ட கபட சந்நியாசிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருந்ததோ என்னவோ ? பெரும்பாலான சித்தர்கள் இந்தப் போலி வேடதாரிகளை ஈவிரக்கம் இன்றித் தோலுரித்துக் காட்டினார்கள் . கஞ்சா உண்டும் , மாதரை மயக்கியும் , திரைமறைவில் சுகபோகங்களை அனுபவித்த அவர்களைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வையும் மக்களிடம் உருவாக்க , சித்தர்கள் அயராமல் பாடுபட்டனர் .
— சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.


இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

ஏப்ரல் 22, 2010

ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது.  17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர்.  இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார்.

அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… ..  ..

இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை.  ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது.  யாரிடமிருந்து காப்பதற்கு?  தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது?

ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள்.  ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள்.  இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள்.  தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள்.  அதனால் மறுத்தார்கள்.

ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள்.  பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள்.  குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது.

இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர்.  இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.  அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்;  ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர்.  ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது.  அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன்.  அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார்.

சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின.  ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர்.  மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்.  படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது.  அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது.  ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம்.

தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம்.  ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள்.  உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம்.  அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள்.  நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக?

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.  இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம்.  நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.  நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது?

அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது.  நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள்.  நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள்.  எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.  நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது.  அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள்.  மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள்.  வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள்.   ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது.

700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன.  ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை.  ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம்.  நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம்.  ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர்.  அங்கே வன்முறை இல்லை.  போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை.  ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது.  உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை.  அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது.   மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது.  காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது.  உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே.

வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள்.  நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள்.  தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம்.  நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை.  நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது?  இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும்.  நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம்.  அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா?  ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை?  ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை.  ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள்.  மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு.  கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.  ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள்.  அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு.

கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம்.  ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை.  கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது.  மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம்.  ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர்.  அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர்.  அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.  ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர்.  நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம்.  விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம்.  அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள்.  நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும்.  கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள்.  நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்?  இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள்.  இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.  நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம்.  ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன்.  ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே.  ஏன் பயப்படுகிறீர்கள்.  ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள்.  அவர்களும் உங்களை நேசிப்பர்.  ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள்.

வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார்.  அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன்.  ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது.  அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம்.  பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள்.  படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும்.  கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது.  எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன்.  காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம்.  இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான்.

நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்?  நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது.  உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது.  அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா?  ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம்.    நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம்.  இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி.  ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை.  யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?   ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது.  அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன.  நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு.

இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது.  இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது.  இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன.  இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு.  இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம்.  நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும்,   நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது.  எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம்.  இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை.  ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள்.  இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள்.  அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி.  சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா?  இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே.  நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான்.  இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது.  திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா?  அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா?  இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை.  அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான்.  சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள்.  தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான்.  இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.

இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம்.  மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு.  அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள்.  அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள்.  போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.  இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.  அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும்.

காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது.  அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை.  ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர்.  இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.  துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.  கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன.  அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது.  உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.  நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும்.  நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா?

அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.  ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது.  அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன்.  இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இது ஒரு இனப்படுகொலை.  மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது.  அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது.  இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும்.

இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை.  இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா?  இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள்.  நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை.  நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள்.  இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள்.

வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது.  சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது.  இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன்.  சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை.  இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள்.  உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள்.  ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள்.  எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை.

தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர்.  இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள்.  தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள்.

மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள்.  உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை.  இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள்.  அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.  இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள்.  ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள்.  எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள்.

அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது.  அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது.  நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம்.  நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள்.  முழுநேரப் போராளிகள் ஆவார்கள்.  அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும்.  அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும்.  அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள்.  ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே.

************

http://www.vinavu.com/2010/02/16/revolution-of-the-poor/

ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன்


எதிர்நோக்கும் பேராபத்து!

ஏப்ரல் 22, 2010

மேற்கு வங்கத்தில் வெடித்திருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் பின்னணியும், அதன் பின்விளைவுகளும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையுள்ள எவரையுமே திடுக்கிட வைக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமை ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன என்பதற்கு முன்பு நந்திகிராமும் இப்போது லால்கரும் எடுத்துக்காட்டுகள்.

கடந்த முப்பது ஆண்டுகளாகவே வளர்ச்சி என்கிற பெயரில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஊடகங்கள் நகர்ப்புற, வசதி படைத்த சமுதாயத்தின் பணக்காரப் படாடோபங்களை நாளும்பொழுதும் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருப்பதை, அரைவயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலையில்லாமல், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாள்தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? “முதலாளித்துவம்’ பற்றி வாய்கிழியப் பேசியவர்களே முதலாளிகளாகிவிடும் விபரீதத்தை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்?

கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் உயிருக்குக் குறி வைத்துத் தோல்வி அடைந்தனர் மாவோயிஸ்ட்டுகள். அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. கட்சித் தொண்டர்களும், அவர்களுக்கு உதவியாகக் காவல்துறையினரும் அப்பாவி மக்களைக் கைது செய்வதும், வீடுகளில் சோதனைகள் நடத்துவதுமாகச் செய்த இம்சைகளின் விளைவாக உருவானதுதான் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்பது. இப்போது, இந்த இயக்கத்தினருடன் மாவோயிஸ்ட்டுகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டனர்.

மக்கள் இயக்கத்தின் துணையுடன் மாவோயிஸ்ட்டுகள், லால்கரிலுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் மீதும், கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடச் செய்துவிட்டனர். இந்த மாவோயிஸ்ட்டுகளின் அட்டகாசம், அடுத்தடுத்த ஊர்களிலும், மாவட்டங்களிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 900 சதுர கிலோமீட்டர் இப்போது மாவோயிஸ்ட்டுகளின் பிடியில். சத்தீஸ்கரிலுள்ள தண்டேவாடாவுக்குப் பிறகு இது அடுத்த மாவோயிஸ்ட் தளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் நடந்த விஷயங்கள் நமக்குத் தெரியும். மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் போல்புர் என்கிற கிராமம். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகண்டன் சாந்தி நிகேதன் கட்டமைப்பு நிறுவனம் என்கிற தனியார் நிறுவனத்துக்காக, மேற்கு வங்கத் தொழில் வளர்ச்சிக் கழகம் 300 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியது. வாக்குறுதி அளித்த நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்பதுடன், பலருக்கும் நஷ்ட ஈடே தரப்படவில்லை என்பதுதான் வேதனை. அதைவிட வேதனை, இன்றுவரை அங்கே எந்தவிதத் தொழிற்சாலையும் நிறுவப்படவும் இல்லை.

விவசாயிகள் பொறுமை இழந்தனர். சுற்றிலும் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் விவசாயம் செய்ய முற்பட்டனர். இவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை அல்ல, மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள். கைகலப்பும், அடிதடியும் என்று தொடங்கி, தோழர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் களத்தில் இறங்கி, இப்போது பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது.

இடதுசாரி அரசின் 32 ஆண்டு ஆட்சியின் மிகப்பெரிய தவறு ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடு அகற்றப்பட்டதுதான். தங்களுக்குச் சாதகமான அல்லது கட்சி சார்புள்ள அதிகாரவர்க்கத்தை மட்டுமே தங்களைச் சுற்றி வைத்துக் கொண்டனர். காவல்துறை, அரசு இயந்திரம் என்று அனைத்திலும் கட்சித் தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூரில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிர்வாகமோ, காவல்துறையோ தலையிட்டுத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியினர் தீர்வு காண்பது என்கிற கலாசாரம் நிலைநிறுத்தப்பட்டது. சிங்குரில், நந்திகிராமில், போல்புரில், இப்போது லால்கரில் என்று இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நிர்வாக இயந்திரம் என்பது செயலிழந்துவிட்டதுதான். கட்சித் தொண்டர்களின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் நிர்வாகத்தின் கடமை என்கிற தவறான கலாசாரத்தால், நல்லது கெட்டது சொல்லவோ, பிரச்னைகளுக்கு நிர்வாக ரீதியான தீர்வு காணவோ வழியில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

லால்கரில் மாவோயிஸ்ட்டுகள் தங்களைச் சுற்றி, உள்ளூர் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு ஏற்பட்டது ஏன்? எப்படி? மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் மற்றும் ஒரிசாவில் உள்ள தீவிரவாதிகள் மத்தியப் பிரதேசம், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கரிலுள்ள தீவிரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இவர்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள தீவிரவாதிகளுக்குத் தருவதுபோன்ற ஆதரவை சீனா நிச்சயமாகக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம்.

எழுபதுகளில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற இடதுசாரிகள் நக்சலைட் இயக்கத்துக்கு ஆதரவளித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இப்போது இடதுசாரிகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளாமல், இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்குத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முற்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கு மத்திய அரசும் காங்கிரஸýம் துணைபோகாது என்று நம்புவோமாக.

ஒன்று மட்டும் நிச்சயம். மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சி என்பதை நினைவில் வைத்து, அதை வேரறுப்பதில் தயக்கம் காட்டலாகாது!
( நன்றி: தினமணி )


இந்தியாவில் கிருத்துவம்

ஏப்ரல் 22, 2010

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கோவா இன்குஷிஷன் – மதவெறி ரீதியில் இந்துக்களுக்குத் தண்டனை அளித்து கொன்றது, கற்பழித்தது, குழைந்தைகள்-முதியோர் என்று பாராமல் கொன்று குவித்தது முதலியன – இன்றைய வரை கிருத்துவர்களின் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்……………….முதலியவை பெருமளவில் மறைக்கப் படுகின்றன. இதை உண்மைகளை மறைக்கும் சித்தாந்தம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனல், வெளிவரும் செய்திகளே மிகவும் கோரமாக, பீதியடையும், கவலைக் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றன.

ஊடகங்களில் / ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிருத்துவர்கள், கிருத்துவர்களின் ஆட்கள், அபிமானிகள்,…………………….என்பதனால் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வந்தாலும், அதன் பின்னணி, தொடர் நிகழ்வுகள், வழக்குகள், முடிவுகள்……………..முதலியவை வராமல் கவனித்துக் கொள்கின்றனர்.

மேலும் தகவல்களைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

http://christianityindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/


கஜினி முகமது : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை.!!!

மார்ச் 19, 2010

கஜினி முகமது :

தோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான்.

காபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடித்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை.

கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்.. சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்

ஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.

அன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

–மதன்


தாஜ் மஹால்

மார்ச் 19, 2010

தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.

இப்ப விஷயத்துக்கு வருவோம்.

நம்ம பள்ளிக்கூட காலத்துலேர்ந்து படித்துக் கொண்டு வருவது என்னவெனில்:

தாஜ் மகாலை கட்டியது ஷாஜஹான். அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர் இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான் நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர். தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது. தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631 – 1653. சுமார் 20000 பேர் இதற்காக உழைத்தனர்.

இப்ப இதைக் கேளுங்க

பேராசிரியர் பி. என். ஓக் என்ன தன்னோட புத்தகம் “Taj Mahal : The True Story” தனில் என்ன சொல்றார்னா…

தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.

முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.

பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.


இணையத்தில் அம்பலமான சாய்பாபா

மார்ச் 18, 2010

இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை

இணையத்தில் அம்பலமான சாய்பாபா

கடவுள் அவதாரம் எனக்கூறிக் கொள் ளும் சாயிபாபாவை பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தி வருவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல முறை சாயிபாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். பாபா செய்யும் மேஜிக்கு களை தி.க. பிரச்சாரகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்து காட்டி வருகின்றனர். நாம் இப்படிப் பகுத்தறிவு பரப்புரைகளை செய்து வரும் நிலையில் சாயிபாபாவின் முன்னாள் சீடர்கள் இணைய தளத்தில் இந்த வேலையை செய்து அசத்தியுள்ளனர். முன்பு ஒரு முறை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சாயிபாபா முன்னாள் சீடர் மலேசியாவைச் சேர்ந்த ஹரிராம் ஜெயராம் என்பவர் சாயிபாபா வின் மோசடி குறித்து தனது கருத்தை கடிதம் வழி எழுதியிருந்தது இங்கு நினைவு கூறத் தக்கது.

இப்போது இவரைப் போன்றே சில சீடர்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த தனி இணைய தளத்தையே துவக்கியுள்ளனர். www.exbaba.com என்ற இணைய தளம் பாபாவை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதிலுள்ள படங்க ளையே இங்கே கொடுத் திருக்கிறோம். வீடியோ படமாக இணையத்தில் இந்தப் படம் வழங் கப்பட்டுள்ளது.

சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறை யச் செய்திகள் காணப் படுகின்றன.

1960-களிலேயே அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இணைய தளத்தில், டேவிட், மற்றும் பயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகார பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. அது இணைய தளத்தில் தோன்றியது முதல் பல செய்திகள் அடுத்தடுத்து வந்தன. பக்தர்கள் கோபத்துடனும் குழப்பத்துடனும் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். ஆனால் சாய்பாபாவின செயல் களுக்கு இலக்கானவர்கள், அவற் றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுதல்களைத் தெரிவித்த னர்; இதுவரை எதையும் வெளிப் படுத்தாமல் இருந்தவர்கள், இப் பொழுது தைரியமாகத் தங்களு டைய அனுபவங்களைகூட முன் வந்தனர். டேவிட் மற்றும் ஃபாயே பெய்லி நீண்டகாலம் சாய்பாபா வின் பக்தர்களாக இருந்தவர்கள். தவறான பாலியல் உறவு, மோசடி, கொடுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுடன், சாய் பாபாவைக் கொலை செய்ய முயன்ற ஒரு செய்தியை அவர்கள் சொல்லு கிறார்கள். அதன் விளை வாகப் பல முக்கியமானவர்கள் சாய்பாபா இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.

பெய்லியின் கண்டுபிடிப்பு களும், அவற்றிற்கு முன்னும் பின் னும் சொல்லப்பட்ட ஒவ்வொன் றும் இந்த இணையதளத்தில் ஆங்கில மூலத்தில் தரப்பட்டிருக் கிறது. முந்தைய பக்தர்கள் டச்சு மொழியில் கொடுத்துள்ள செய்தி கள் ஆங்கில மொழி பெயர்ப்பு களாகத் தரப்படும். சொல்லப்படும் செய்திகளை நம்ப முடியாமல் தலையாட்டுப வர்கள்கூட, திறந்த மனத்துடன் இணைய தளத்தைத் தொடர்ந்து படிப்பார்கள் என நம்புகிறோம். தங்களுடைய சொந்த ஆராய்ச் சியை மேற்கொள்ளத் தொடங்க ஆவல் கொள்ளுவார்கள் எனவும் நம்புகிறோம். உதவி செய்யவும் மேற்கொண்டு தகவல்களைத் தரவும் பலர் இருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்த ரின் ஆன்மீகக் கண்ணோட்டத் தைக் குறைந்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண் களும் தனித் தனியாகத்தான் தங்க வைக்கப் படுகின்றனர். திருமண மான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டு களாக இது மாறிவிட்டது. ஆண் பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.

பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கக தால் ப்ரூக் 1970-71-இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கி யிருந்தார். தனி தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத் தூண்டினார் என்று அவர் கூறினார். 1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்த் ஹார்ட் என்பவர் 1990 இளவேனில் காலத்தில் பாபாவைத் தனியாகச் சந்தித்தபோது அவரைத் தழுவிக் கொண்ட பாபா அவரின் உறுப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை ஹாலந்தில் 1992 ஜனவரியில் பேசப்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு இதுபோன்ற பல கதைகள் வெளிவந்தன. இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து 20 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 நிகழ்ச்சிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களே நேரில் கூறியுள்ளனர். மற்ற 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் தரப்பு மனிதர்கள் தகவல் தந்துள்ளனர். இத்தகைய தனிச் சந்திப்புகளின்போது பாபாவுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த தால் ப்ரூக், சாம், யங், 15 வயதுச் சிறுவன், ஸ்வீ டன் நாட்டைச் சேர்ந்த கான்னி லார்சன் இங்கிலாந்தின் கெயித் ஹார்டு, இரானின் செயித் கொராம் ஷெகல், ஜெர்மனியின் ஜென்ஸ் சேத்தி, ஆஸ்திரேலி யாவின் ஹான்° டி க்ரேகர் ஆகிய 8 பேர் நேரடியாகத் தகவல் தந்துள்ளனர். பாபாவுடன் 16 ஆண்டுக ளாகப் பாலியல் உறவு கொண்ட தாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாடியா தெரிவித்துள் ளார். 1986-இல் பாபாவைச் சந் தித்த 23 வயது ஸ்வீடன் இளை ஞர் (பின்னர் தற்கொலை செய்து கொண்டார்), இங்கிலாந்து நாட்டு மைக்கேல் பெண்டர் (பின்னர் தற்கொலை செய்து கொண் டார்) 1989-இல் பாபாவைப் பலமுறை தனியாகச் சந்தித்தவர், ஸ்வீடன் நாட் டைச் சேர்ந்த 18 வயதுச் சிறுவன் 1998-1999-இல் பாபாவை 8 முறை தனியாகச் சந்தித்தவன், மற்றும் இந்திய மாணவர்கள் பலரும் சாய்பாபா தங்களுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டு தகவல் தந்துள்ளனர். பாபாவைத் தனியாகச் சந்தித்த போது தங்களின் உறுப்புகளைத் தூண்டிவிட்டதாக அbரிக்கா வின் எம்.டி., ஜெட் கெயர்ஹான், நெதர்லாந்தின் மாத்திஜிஸ் வான் டெர் மீர், இங்கிலாந்தின் டேவிட் பால் டிப்மெக் ஆகியோர் தகவல் தந்துள்ளனர். இவை தவிர பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்க ளின் குடும்பத்தினர் என ஏராள மானவர்களின் குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் குவிந்துள்ளன. அத்தனையும் எழுத பக்கங்கள் போதாது. என்றாலும் உண்மை தொடர்ந்து அவைகளை வெளி யிடும். வெகு மக்களைச் சென்றடை யும் ஊடகங்கள் இது போன்ற உண்மைகளை வெளியிடத் தயங் குகின்றன. டெகல்கா.காம் இணைய தளம் பா.ஜ.வினர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் இந்த சாய்பாபா முன்னாள் சீடர்களின் இணையதளமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இளையமகன்

கு.வெ.கி.ஆசான், த.க.பாலகிருட்டிணன் உதவியுடன்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ் (2004 அக்டோபர் 1-15)


இப்படித்தான் அம்பலமானார் சாய்பாபா

மார்ச் 18, 2010

படவிளக்கம்:
1. முதலில் தண்ணீர் குடிப்பது போல பாவனை
2.லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைக்குட்டையை கையிலெடுக்கிறார்.
3. வாயைத் துடைப்பது போல் பாவனை
4. அப்படியே லிங்கத்தை வாயினுள் திணிக்கிறார்.
கவனிக்க: இடதுகை விரல்கள்
5. வாய்க்குள் லிங்கம் சென்றதும் முகத்தைத் துடைப்பது போல் ஒரு நடிப்பு.
6. மீண்டும் தண்ணீர் நடிப்பு
(5,6,7-படங்களில் கவனியுங்கள் உதவியாளரின் பரபரப்பு.)

7. வாந்தி எடுப்பது போல் நடிப்பு
8, 9 வாயில் வைத்திருந்த லிங்கம் வெளியே வருகிறது.


சாயிபாபா

மார்ச் 18, 2010

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்

தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.

அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.

தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.

செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.

மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.

இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.

கைச்சால வித்தை

கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

———–நன்றி:- பி.பிரேமானந்து “அறிவியலா, அருஞ்செயலா”


கடவுள் பற்றி காமராசர் – அதிகம் அறியப்படாத செய்தி

பிப்ரவரி 13, 2010

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது.  சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார்.  பலிபீடம், கொடிமரம்,  நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார்.  இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல்,   எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங் காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்.  விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார்.  பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம்.  குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா….  அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே…!” என்பார்.  தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர்.  பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

“ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா…?  எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம,  ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப்போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலே ருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு… அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு…!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா…?”

“இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா…?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும்.

அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா…? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயி ருந்தா அதைத் தூக்கிக் குப்பை யில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா…?இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே…?” என்றேன்.

“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” என்று கேட்டேன்.
“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல்லா ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே…. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே…! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்…” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா…?” எனக் கேட்டேன்.

“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபி ஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்….. வறுமை – சுகா தாரக்கேடு…. ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன் னேன்…..? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்…?”

தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா…. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா…. இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக் கிறீங்களா….?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாம திக்காமல்… “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா…?  “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனிதனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந் தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மத மும், நீ பெரிசா… நான் பெரி சான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்…?”  தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே… அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே…?” என்று வினாத் தொடுத்தேன்.

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்… கிறுக்கா… நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க…. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.  நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல… புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே…?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.  மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்….” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங்க…?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா…?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்…!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா…?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

-நன்றி: திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)