கபட சந்நியாசிகள் !

சமண — பௌத்த சமயங்களின் வீழ்ச்சியும் , பக்தி மார்க்கத்தின் வெற்றியும் பல புதிய மதக்கலாச்சாரங்களை தமிழகத்தில் தோற்றூவித்தன . அவற்றில் ஒன்றுதான் சந்நியாசிகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தும் — அங்கீகாரமும் . சைவமும் , வைணவமும் போட்டிபோட்டு அவர்களை இறைவனின் அடியார்களாகச் சித்தரித்தன . கடவுளின் அம்சமாகக்கூட அவர்கள் கருதப்பட்டனர் . அவர்களை உபசரிப்பதும் , உணவளிப்பதும் , வணங்குவதும் , அவர்கள் கேட்பதைக் கொடுத்துத் திருப்திப்படுத்துவதும் , சாதாரண பக்தர்களின் மதக்கடமைகளாக — தொண்டுகளாகப் போதிக்கப்பட்டன . அந்தத் தொண்டுகள் சுவர்க்கத்திற்கான திறவுகோல்கள் எனச் சான்றளிக்கப்பட்டன . பெற்ற பிள்ளையைக் கொன்று சமைத்துப் போடவேண்டும் என்று கேட்ட சிவனடியாருக்காக , மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்டரும்… ‘ எனது உடல்பசியைத் தணிக்க உனது மனைவியைத் தரவேண்டும்’ என்று கூசாமல் கேட்ட சிவனடியாரை மகிழ்விக்க , தனது இல்லாளைத் தர முன்வந்த இயற்பகையும் , நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர் . பகுத்தறிவு — மனிதாபிமானம் — பெண்ணியம் ஆகியவை , பக்தியின் பெயரால் அங்கே படுகுழியில் புதைக்கப்பட்டன . அந்த அளவிற்குச் சந்நியாசிகளுக்கு உயரிய செல்வாக்கை உருவாக்கி வளர்த்தன வைதீக மதங்கள் . நாளடைவில் அந்தச் சாமியார்களில் பலர் மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்ற மூன்றையும் துறக்காமல் , அவற்றைச் ‘ சிக்கெனப் பிடித்துக்கொண்ட ‘ சுயநலமிகளாய் மாறி , பசுத்தோல் போர்த்திய புலிகளாய் , மதப்போர்வைக்குள் பாதுகாப்பாக உலாவந்தனர் . காவி உடைக்குள் காமசூத்திரர்களைச் சரிபார்க்கும் சரச ஒத்திகைகள் நடத்தப்பட்டன . அப்பாவி ஆண்களும் , பெண்களும் பக்தியின் பெயரால் நடந்த அந்தச் சுரண்டலுக்குப் பலியானார்கள் . இது , இன்றுவரை நீடிக்கும் அவலமாகத் தொடர்வது வெளிப்படையான — வேதனையான உண்மை . சித்தர்களின் காலத்தில் இப்படிப்பட்ட கபட சந்நியாசிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருந்ததோ என்னவோ ? பெரும்பாலான சித்தர்கள் இந்தப் போலி வேடதாரிகளை ஈவிரக்கம் இன்றித் தோலுரித்துக் காட்டினார்கள் . கஞ்சா உண்டும் , மாதரை மயக்கியும் , திரைமறைவில் சுகபோகங்களை அனுபவித்த அவர்களைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வையும் மக்களிடம் உருவாக்க , சித்தர்கள் அயராமல் பாடுபட்டனர் .
— சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

பின்னூட்டமொன்றை இடுக